காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி தீவிரம்
தஞ்சாவூர்:
கடந்த 10 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சம்பாநெல் விதைக்கும் பணிகளை விவசாயிகள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி, வெண்ணாறு நதிகளில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 85.91 அடி(48.10 டிஎம்சி) தண்ணீர் உள்ளது.
அணைக்கு 7,715 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 2,997 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது.
நீடாமங்கலம், தஞ்சாவூரில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழையும், பாபநாசனம், நாகப்பட்டினம், திருப்பூண்டிபகுதிகளில் 20 மி.மீ. மழையும், மயிலாடுதுறை, சீர்காழி, பேராவூரணி, வலங்கைமான் பகுதிகளில் 20 மி.மீ.க்குகுறைவான மழையும் பெய்துள்ளது.
பல இடங்களில் குறுவை சாகுபடியை முடித்துவிட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனர்.
இருப்பினும் மற்ற பகுதிகளில் குறுவை சாகுபடி இன்னும் முடிவடையவில்லை. நெல் அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்மழை பெய்வது இந்த விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் குவிண்டாலுக்கு ரூ.60 கூடுதலாகத் தரும்படியும், 17சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை வாங்கிக்கொள்ளும்படியும் விவசாயிகள் அரசை கோரியுள்ளனர்.
இந்த சாகுபடியை முடித்துவிட்டு இப் பகுதி விவசாயிகளும் சம்பா நெல் விதைப்புக்குத் தயாராக உள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளாக இல்லாத அளவுக்கு நல்ல மழை பெய்வதால் விவசாயிகளிடையே சம்பா நெல் குறித்தநம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு நாகை, தஞ்சை. திருவாரூர் மாவட்டங்களில் 3.5லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சம்பா சாகுபடி நடைபெறும். விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்அளவுக்கு விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications