கந்துவட்டி கும்பலிடம் சிக்கிய குட்டி பத்மினி
சென்னை:
கந்து வட்டி கேட்டு நடிகை குட்டி பத்மினியை மிரட்டிய பைனான்சியரை போலீஸார் கைது செய்தனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ் படங்களிலும், சீரியல்களிலும் நடித்தவர் குட்டி பத்மினி. இவர் சிலடிவி தொடர்களும் தயாரித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குட்டி பத்மினி புகார் செய்தார். அந்த புகாரில்,
ராஜேஸ்வரராவ் என்பவரிடம் வியாபாரம் தொடர்பாக ரூ. 10 லட்சம் கடன் வாங்கினேன். கடனுக்காக தேதிகுறிப்பிடாமல் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 4 வெற்றுக் காசோலைகளிலும், 4 புரோ நோட்டுகளிலும் கையெழுத்திட்டுகொடுத்தேன்.
ராஜேஸ்வரராவ் கடனுக்கு ஆண்டுக்கு 36 சதவீதம் வட்டி வசூலித்தார். வட்டியும் அசலுமாக ரூ. 15.31 லட்சம்செலுத்தினேன். அதன்பிறகு மேலும் ரூ. 25.2 லட்சம் நான் தர வேண்டும் என்று ராஜேஸ்வரராவ் மிரட்டினார்.
நுங்கம்பாக்கத்தில் எனது மகளுக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தையும் வாங்கிக்கொண்டு திருப்பித்தர மறுத்துவிட்டார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீஸார் ராஜேஸ்வரராவை கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்துவிசாரித்து வருகின்றனர்.