ஆளுநருடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
சென்னை:
ஆளுநர் ராம்மோகன் ராவை முதல்வர் ஜெயலலிதா இன்று சந்தித்துப் பேசினார்.
கவர்னர் மாளிகையில் சுமார் 15 நிமிடங்கள் இச் சந்திப்பு நடந்தது. ராம்மோகன் ராவ் மாற்றப்படலாம் என்றுகூறப்படும் சூழ்நிலையில் அவரை ஜெயலலிதா சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ராம்மோகன் ராவை மாற்றுவதைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்,அரசுக்கு நேற்று நீதிமன்றத்திடம் இருந்து கடும் சாட்டையடி கிடைத்தது.
உங்களிடம் கேட்டுவிட்டுத் தான் ஆளுநர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியநீதிபதிகள், ஆளுநரை மாற்றும் விஷயத்தில் இடைக்காலத் தடை எதையும் விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து ராம்மோகன் எந்த நேரமும் மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந் நிலையில் இன்று அவரைமுதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்தார்.
ஆளுநரை முதல்வர் சந்திக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன், அமைச்சர்கள் மத்தியில் கிலி பரவியது. யார், யார்தலை உருளப் போகிறதோ என்ற அச்ச உணர்வில் அவர்கள் இருந்தனர். ஆனால், இது மரியாதை நிமித்தமானசந்திப்பு என தெரிவிக்கப்பட்ட பின்னரே அமைதியாயினர்.
இதற்கிடையே ஆளுநர் பதவி விலகிவிட்டதாகவும், இதனால் தான் அவரை முதல்வர் சந்தித்தாகவும்கூறப்படுகிறது. ஆனால், இத் தகவல்களை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தீவிரமாக மறுக்கின்றன.
வழக்கமாக பதவி விலகுமாறு மத்திய அரசிடம் இருந்து இவ்வளவு நெருக்குதல் வரும்போது கவர்னர்கள்தாங்களாகவே விலகிவிடுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், இத்தனைக்குப் பிறகும் ராம்மோகன் ராவ்அசைந்து கொடுக்காமல் இருப்பது பலரது புருவங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.