கலெக்டர் அலுவலகம் ஜப்தி; சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை நகர சிவில் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டதால்ஊழியர்கள் உட்கார இருக்கையின்றி வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ளது தம்பையா ரெட்டி தெரு. கடந்த 1977ம் ஆண்டு ரயில் நிலையவிரிவாக்கத்திற்காக இந்தத் தெருவில் உள்ள ராஜேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான 3 கிரவுண்ட், தம்பையாரெட்டிக்குச் சொந்தமான 2 கிரவுண்ட் என மொத்தம் ஐந்து கிரவுண்ட் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது.
கையகப்படுத்திய நிலத்துக்குரிய இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களான ராஜேஸ்வரி, தம்பையாரெட்டி ஆகியோருக்குக் கொடுக்காமல் மாநகராட்சி இழுத்தடித்தது.
இதைத் தொடர்ந்து நில உரிமையாளர்கள் சார்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குமுடியும்வரை நில உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்கி வருமாறு மாநகராட்சிக்குஇடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதையும் மாநகராட்சி மேற்கொள்ளவில்லை.
இந் நிலையில் சிட்டி சிவில் நீதிமன்றத்தை நில உரிமையாளர்கள் நாடினர். வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன்,15 நாட்களுக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டார்.
ஆனால் குறிப்பட்ட காலத்திற்குள் நிவாரணம் கிடைக்காததால், ஆட்சித் தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்யநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அமீனாக்கள் சென்னை மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அலுவலகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான டேபிள், சேர்களை அவர்கள் வெளியில் எடுத்து வைத்தனர். ஆட்சித்தலைவர் அமரும் இருக்கையும் ஜப்தி செய்யப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கையால் ஆட்சித் தலைவர், அலுவலகஊழியர்கள் நின்று கொண்டே பணியாற்றும் பரிதாபம் ஏற்பட்டது.
இந் நிலையில் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுடன் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கஸ்தூரி, நவம்பர் 20ம்தேதிக்குள் பாக்கி உள்ள நிவாரணத் தொகையை வழங்கி விடுவதாக உறுதியளித்து எழுதிக் கொடுத்தார்.இதையடுத்த ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் அலுவலகத்திற்குள் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications