ராஜ் டிவி விவகாரம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் தடை
சென்னை:
விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், ராஜ் டிவி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய அரசு ரத்துசெய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜ் டிவிக்கு வாங்கிய லைசென்ஸை வைத்துக் கொண்டு, உரிய அனுமதி இல்லாமல் ராஜ் மியூசிக் மற்றும்தெலுங்கில் விஸ்ஸா ஆகிய சேனல்களை ராஜ் டிவி தொடங்கி நடத்தி வந்தது.
இதையடுத்து, ராஜ் டிவியின் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக மத்திய தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ் டிவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன், உரிமத்தை ராஜ் டிவி தவறாகபயன்படுத்தியது உண்மையே என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து ராஜ் டிவி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை ராஜ் டிவி குழுமம் மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்குத் தடை விதித்தனர்.