ஜெயலலிதாவின் செயல் உரிமை மீறலாகும்: பாட்டீல்
ஹைதராபாத்:
தனக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை ஜெயலலிதா டேப் செய்து வெளியிட்டது அரசியல்சட்ட உரிமை மீறலாகும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
ஆளுநர் ராம்மோகன் ராவை நீக்குவது தொடர்பாக சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை பதிவு செய்த ஜெயலலிதா,அதனை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்தார்.
இன்று ஹைதராபாத் வந்த பாட்டீலிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது,
ராம்மோகன் ராவை நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே அவர் நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில்ஜெயலலிதாவுடன் நான் பேசியதை முதல்வர் வெளியிட்டது உரிமை மீறலாகும். இது குறித்து மேலும் நான் விவாதிக்க விரும்பவில்லை.
இதற்கு பதில் சொல்ல வேண்டியது ஜெயலலிதா தான். மாநில ஆளுநர் சர்ச்சைகளுக்குள் இழுக்கப்படக் கூடாது. ராவை நீக்கியதில் எந்தத்தவறையும் மத்திய அரசு செய்யவில்லை. இது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதே. இது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கவேண்டியதில்லை என்றார்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சருடனான தொலைபேசி உரையாடலை வெளியிட்ட ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என மத்தியஅமைச்சர் இளங்கோவன் கோரினார். இல்லாவிட்டால் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிங்வி, ஜெயலலிதாவின் செயல் ஜனநாயகமுறைகளுக்கு எதிரானது. மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
தயாநிதி மாறன் தாக்கு:
உள்துறை அமைச்சருடனான பேச்சை வெளியிட்டதன் மூலம் பெரிய சர்ச்சயைக் கிளப்பிவிட்டார் ஜெயலலிதா என்று கூறியுள்ள மத்தியதொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், இது அரசியல் சட்ட விரோத செயல் என்றார்.












Click it and Unblock the Notifications