லட்சுமி பிரானேஷுக்கு எதிராக திமுக வழக்கு
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சருக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை உச்ச நீதிமன்றத்தில்வெளியிட்ட தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிதிமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநர் மாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேநடந்த தொலைபேசி உரையாடலை மனு வடிவில், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வரும், லட்சுமி பிரானேஷும் தங்களது பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந் நிலையில் ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. தற்போது லட்சுமி பிரானேஷ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், ஆளுநர் மாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசை விமர்சித்துள்ளார். மேலும், உள்துறைஅமைச்சரின் தொலைபேசி உரையாடலை உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் மத்தியஆட்சிப் பணியாளர்களுக்கான சட்டத்தை அவர் மீறியுள்ளார். ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில்தலைமைச் செயலாளர் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ஆற்காடுவீராசாமி கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.