வங்கிக் கடன்: வலம்புரிஜானுக்கு சிறை தண்டனை
சென்னை:
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கடிதம் எழுதியதாக முன்னாள் எம்.பியும், நின்று போன தாய் பத்திரிக்கையின் முன்னாள்ஆசிரியருமான வலம்புரிஜானுக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வலம்புரிஜான் கடன் வாங்கியிருந்தார். நேரு குறித்த புத்தகம்வெளியிட இந்தக் கடனை அவர் வாங்கினார். அவருக்காக மணி என்பவர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
ஆனால், வலம்புரிஜான் புத்தகமும் எழுதவில்லை, அதை வெளியிடவும் இல்லை. வாங்கிய கடன் தொகையையும் திருப்பிச்செலுத்தவில்லை. இதனால் பணத்தை வசூல் செய்வதற்காக, உத்தரவாதம் கொடுத்த மணி மீது வங்கி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கியில் வாங்கிய தொகையில் 25 சதவீதத்தை மணியும், மீதிப் பணத்தை வலம்புரிஜானும் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், வலம்புரிஜான் பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை. மாறாக தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு வலம்புரிஜான் இரண்டுகடிதங்களை அனுப்பினார்.
அதில், மணியின் வியாபாரத்திற்காகத்தான் கடன் வாங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை முழுவதையும் அவர்தான் பயன்படுத்தினார்.எனவே என்னால் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கூறி தீர்ப்பையும் விமர்சித்திருந்தார்.
இந்த இரு கடிதங்கள் குறித்தும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஏ.கே.ராஜன் ஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச்விசாரித்தது.
அவர்கள் அளித்த தீர்ப்பில், முன்னாள் எம்.பியும், ஒரு வழக்கறிஞருமான வலம்புரிஜான் இவ்வாறு எழுதியிருப்பது நீதிமன்றத்தைஅவமதிப்பதாக உள்ளது. நீதிமன்றத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதிய வலம்புரிஜானை நீதிமன்றம் கண்டிக்கிறது.
இதனால், அவருக்கு ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.