சென்னையில் நடுரோட்டில் கிடந்த மண்டை ஓடு !
சென்னை:
சென்னை நகரின் முக்கியப் பகுதியான சேத்துப்பட்டில் நடுரோட்டில் மீண்டும் ஒரு மண்டை ஓடு கிடந்தது.
சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையையொட்டி உள்ளது மெக்நக்கோலஸ் சாலை. வாகனப் போக்குவரத்து, ஆட்கள் நடமாட்டம் மிக அதிகம்உள்ள சாலை இது. இந்தச் சாலையில் நேற்று ஒரு மண்டை ஓடு கிடந்தது.
இதைப் பார்த்து அப்பகுதியில் போவோர் வருவோர் அனைவரும் பீதியடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்பும் இதே சாலையில் ஒருமண்டை ஓடு கிடந்தது.
அப்போது இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அவர்கள் மாமூல் வேலைகளில் பிஸியாகஇருந்ததால், பொதுமக்களே அந்த மண்டை ஓட்டை அப்புறப்படுத்தினர்.
இந் நிலையில் மீண்டும் ஒரு மண்டை ஓடு சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் கோபமும் தொற்றிக் கொண்டது.வழக்கம்போல் காவல்துறையிடம் மக்கள் புகார் கொடுத்தனர்.
ஆனால், மண்டை ஓடு கிடந்த பகுதி யாருடைய எல்லைக்குள் வருகிறது என்ற பிரச்சினையில் சேத்துப்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம்போலீஸாருக்குள் மோதல் ஏற்பட்டதால் மண்டை ஓடு நீண்ட நேரமாக அங்கேயே கிடந்தது.
இதையடுத்து பொது மக்களே அதனை அப்புறப்படுத்தினர்.
இப் பகுதிக்கு அருகில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மயானம் உள்ளது. அங்கிருந்து இந்த மண்டை ஓடுகள் நாய்களால் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.