பொய் சாட்சிகளை உருவாக்குகிறது அரசு: இல.கணேசன்
சென்னை:
ஜெயேந்திரர் கைது தொடர்பாக பொய்யான ஆதாரங்களை அரசு உருவாக்கி வருவதாக அகில இந்திய பாஜக செயலாளர்இல.கணேசன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சி சங்கராச்சாரியார் நிரபராதி. அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கினை நியாயப்படுத்த ஆதாரங்களைஉருவாக்கி வருகிறார்கள். அவரைக் கைது செய்ததும் தவறு; கைது செய்யப்பட்ட விதமும் தவறு.
இதற்கு முன் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டபோது, தனது வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். விருந்தினர்மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர் என்பதெல்லாம் மறந்து விட்டு மறைத்து விட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றுபேசுகிறார்கள். அரசியல்வாதிக்கு ஒரு நீதி, ஆன்மீகவாதிக்கு ஒரு நீதி.
வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்கலாமா என்று நீதிபதியே முன்வந்து கேட்டபோதும் அரசு மறுக்கிறது.
ஜெயேந்திரர் ஜாமீனில் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காகவே காவல் துறையின் பொறுப்பில் எடுத்து விசாரிக்க ஒரு மனுவைதாக்கல் செய்து சாதகமாக தீர்ப்பினையும் தமிழக அரசு பெற்றுள்ளது. ஜெயேந்திரரை விசாரிக்கப்போகும் அதிகாரி ஏற்கனவேகடுமையாக நடந்து கொண்டவர் என்ற புகாருக்கு உள்ளாகியிருப்பவர். இப்போது அவர் ஜெயேந்திரரை விசாரிக்கப் போவதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டாக்கும்.
அரசின் இந்த முடிவு பழிவாங்கும் எண்ணத்துடன் கூடியது. இதனைக் கண்டித்து நாளை விசுவ இந்து பரிஷத் தமிழகம் முழுவதும்மனித சங்கிலி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள், இந்து மத அபிமானிகள், சங்கர மடத்து பக்தர்கள் அனைவரும்கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனித சங்கிலி போராட்டம்:
இதற்கிடையே சங்கராச்சாரியாரை விடுதலை செய்யக் கோரி பா.ஜ.க, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆகியஅமைப்புகளின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் நடந்த இந்த அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் வி.எச்.பி சர்வதேசதுணைத் தலைவர் வேதாந்தம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் துரை சங்கர், இந்து முன்னணித் தலைவர்ராம.கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனிதச் சங்கிலிப் போராட்டத்தைத் தொடர்ந்து நாளை மறுதினம் கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்றும்அவர்கள் தெரிவித்தனர்.
கொலையில் சிறிதும் தொடர்பில்லாத ஆச்சாரியாரை பொய்யான சாட்சிகள் தயார் செய்து கொலைச் சதியில் சிக்கவைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.
ஜெ. கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளை பா.ஜ.க, விஎச்பிதொண்டர்கள் எரித்தனர். கூடவே மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
மத்திய அரசு மீது புகார்:
இதற்கிடையே பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில், இந்த வழக்கில் சங்கராச்சாரியாரை சிக்கவைக்க மத்திய அரசு நெருக்குதல் கொடுத்தது. இதற்குப் பணிந்து தான் மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதுஎன்றார்.