உளவு படை வீரர் கொலை: புலிகள் மீது அரசு புகார்
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர் ஒருவரையும், ராணுவத்துக்கு உளவு சொல்லும் நபர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக இலங்கை அரசு கடுமையான குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரையும், அவருக்கு உளவு சொல்லும் நபர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் இத் தாக்குதல் நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளனர். இந்தத் கொலைகளை புலிகள்தான் செய்திருக்க வேண்டும்.
இதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் மீறிவிட்டனர். மேலும் அமைதி முயற்சிகளில் புலிகள் எந்த அளவுக்கு அக்கறைகொண்டிருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கொலைகளுக்கு இதுவரை புலிகள் பொறுப்பேற்கவில்லை.
நீதிபதி சுட்டுக் கொலை:
இதற்கிடையே கொழும்பில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிதியா இன்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டுக்குள் நுழைந்த நபர், காவலாளியை சுட்டுக் கொன்றுவிட்டு நீதிபதியையும் சுட்டுக் கொன்றார். பின்னர் தயாராகநின்றிருந்த காரில் ஏறி அவர் தப்பிவிட்டார். இந்தக் கொலையை யார் செய்தது என்று தெரியவில்லை.
இச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு நிலவுகிறது.