ஆழியாறு-பரம்பிக்குளம் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை:
ஆழியாறு-பரம்பிக்குளம் நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது.
நதிநீர் பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 6ம் தேதிசென்னை வந்தார். அப்போது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 27ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் தமிழக அமைச்சர்கள் பொன்னையன்,பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பொதுப்பணித்துறைச்செயலாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேரள அரசின் சார்பில் நிதித் துறை அமைச்சர் வைக்கம் புருஷோத்தமன், நீர்வளத் துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன்மற்றும் தலைமைச் செயலாளர் பாபு ஜேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது இந்தப் பேச்சுவார்த்தையில் ஆனமலையாறிலிருந்து 2.5டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அமைச்சர்க்ள் கோரிக்கை வைத்தனர். அதை கேரள அமைச்சர்கள் ஏற்கவில்லை.
மேலும் பல முக்கிய விஷயங்களிலும் நல்ல முடிவு எட்டப்படவில்லை. எனவே வரும் 18ம் தேதி மீண்டும் சந்தித்துப் பேச முடிவுசெய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை குறித்து கேரள அமைச்சர் வைக்கம் புருஷோத்தமன் நிருபர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமானமுறையில் நடந்தாலும் பல முக்கிய விஷயங்களில் தீர்வு ஏற்படவில்லை என்றார்.