நாடாளுமன்றத்தில் வெடிக்கும் ஜெயேந்திரர் விவகாரம்
டெல்லி:
சங்கராச்சாரியார் கைது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப பாஜக முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியதையொட்டி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் பா.ஜ.க. மூத்ததலைவர்களின் கூட்டம் நடந்தது.
இதில் பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மல்ஹோத்ரா,
வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சங்கராச்சாரியார் கைது விவகாரத்தைக் கிளப்புவோம். இந்த விவகாரத்தை நாளையே கிளப்பஇருந்தோம். ஆனால், வாஜ்பாயும் அத்வானியும் பாட்னா செல்வதால் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் இந்த பிரச்சனையைக் கிளப்ப முடிவுசெய்துள்ளோம்.
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் சங்கராச்சாரியார் விவகாரத்தை பாஜக கைவிட்டுவிட்டதாக வரும் தகவல்கள் தவறானவை.
பொடா சட்டம் நீக்கப்பட்டுவிட்டதால் உள்நாட்டு அமைதி சீ"ர்குலைந்துவிட்டது. இந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் கிளப்பப்படும்என்றார்.
கடந்த முறையைப் போல் அல்லாமல் மக்களவை, மாநிலங்களவையை நடத்த விடாமல் தடுப்பதில்லை என்ற முடிவுக்கு பா.ஜ.க. வந்துள்ளது.தொடர் தேர்தல் தோல்விகளால் இந்த முடிவை அக் கட்சி எடுத்துள்ளது.
வாஜ்பாய், அத்வானி கைதாகி விடுதலை:
இந் நிலையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து வாஜ்பாய், அத்வானி ஆகியோர் தலைமையில் இன்று பா.ஜ.க டெல்லியில் போராட்டம்நடத்தியது. நாடாளுமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் அமளி:
இதற்கிடையே இன்று நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாளே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்களுக்கும் உ.பி. முதல்வர்முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டது.
முலாயம் அரசை கலைக்கக் கோரி மாயாவதி கட்சியினர் களேபரம் செய்ய மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
ஒருவழியாய் அமளி முடிவுக்கு வந்தவுடன் மறைந்த பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் மற்றும் மறைந்த 6 முன்னாள் எம்பிக்களுக்கும்அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டது.