தொண்டர்களை தேடும் காங்கிரஸ்!
சென்னை:
மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்மிகப் பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான தீவிரப் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம்முழுவதும் 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை வெறும் 50,000 உறுப்பினர்களையே இதுவரை திரட்ட முடிந்துள்ளது.இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் காங்கிரசாரின் குடும்ப உறுப்பினர்கள் தான். வெளியாட்கள் அந்தக் கட்சியில் சேர ஆர்வம்காட்டவில்லை.
தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த நிலவரத்தை கட்சியின் மேலிடப் பார்வையாளர் அகிலேஷ் தாஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது 50லட்சம் நிர்ணயம் செய்து விட்டு வெறும் 50,000 பேரை மட்டுமே சேர்க்க முடிந்ததா என்று அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த 50,000 பேரும் தலா 25 சாதாரண உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துள்ளதாகவும், அதன்படி மொத்தம் 12.5 லட்சம் புதியஉறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளதாகவும் அகிலேஷ் தாசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் கூறினர்.
உறுப்பினர் சேர்க்கை ஏன் இவ்வளவு மந்தமாக இருக்கிறது என்ற அகிலேஷ் தாஸின் கேள்விக்கு சில தலைவர்கள் பதிலளிக்கையில்,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வந்ததால் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக மேற்கொள்ள முடியவில்லை. மேலும்தீபாவளி, ரம்ஜான் என பண்டிகைகளும் தொடர்ந்து வந்ததால் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட முடியவில்லை என்றும்நொண்டிச்சாக்கு கூறப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தும் கூட உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க முடியாமல் போனது குறித்து காங்கிரஸ்தலைமையிடம் அகிலேஷ் தாஸ் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸார் இடையே நிலவும் கோஷ்டிப் பூசல் தான் இதற்குக் காரணம் என்றும் கடித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இவர் நம்மளை சொல்றாரே.. இவர் எத்தனை பேரை கட்சியில சேர்த்தாராம்... அகிலேஷ் அந்தப் பக்கம் போனவுடன் ஒரு கதர்ச் சட்டைசொன்னது!!