ஜெயேந்திரர் கைது: பாஜகவுக்கு ஜ.மு.கூ. கண்டனம்
சென்னை:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொடர்புப்படுத்தி பாஜக உள்ளிட்ட சங் பரிவார் தலைவர்கள்பேசி வருவதற்கு சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின்தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கருணாநிதி தவிர, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சட்டசபை காங்கிரஸ்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பாமகா நிறுவனர் ராமதாஸ்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு, பாமக தலைவர் ஜி.கே.மணி, சிபிஎம் செயலாளர் வரதராஜன், மதிமுகஅவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தொடர்ந்து சம்பந்தப்படுத்தி பாஜக, விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார் தலைவர்கள் பேசிவருவதற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கடும் கண்டனம் தெரிவித்தனர் என்றார்.
கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக அரசு எந்த விதமான நிபந்தனையும் இன்றி, அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக புதிய கடன்களை வழங்க முன்வரவேண்டும்.
சாலைப் பணியாளர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு, சாலைப்பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும். அதேபோல் மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
இத் தீர்மானங்களை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.