இந்தியாவில் விளாடிமீர் புடின்: பிரதமருடன் பேச்சு
டெல்லி:
3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசினார்.
புடீனுடன் ரஷ்ய உயர் அதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. அவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் இன்று காலை டெல்லி விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், வெளியுறவுச் செயலாளர்ஷ்யாம் சரண் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர்.
இதையடுத்து மன்மோகன் சிங்கை புடீன் சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜே.என். தீக்ஷித் மற்றும் ஷ்யாம் சரண் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பிற்குப் பின் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த கூட்டுப் பிரகடனத்தை இரு தலைவர்களும்வெளியிடுகிறார்கள்.
மேலும், ரஷ்யாவின் செயற்கைக்கோள் மூலமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியாவும் சேர்வது தொடர்பானஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுகிறார்கள்.
ரஷ்ய அதிபரின் இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு உறவுகளுக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைக் களைவது குறித்துமுக்கியமாக ஆராயப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா விசாக்களை வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பாகஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இதுதவிர, இருநாடுகளுக்கு இடையே வங்கி தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் 3ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா மற்றும் ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளுக்கும் 8 ரஷ்ய வங்கிகளுக்கும் இடையே தொடர்புஏற்படுத்தப்படவிருக்கிறது.