மயக்க ஊசி, கார் கடத்தல், பலே பெண்கள்
புதுக்கோட்டை:
சுற்றுலாவுக்குச் செல்வது போல நடித்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் டிரைவரைத் தாக்கிவிட்டு காரைக் கடத்திச் சென்றனர்.
இந்தக் கார் தமிழக அமைச்சர் நைனார் நாகேந்திரனின் தங்கையின் கணவருக்குச் சொந்தமானது என்று தெரிகிறது.
குற்றலாத்தைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் சுந்தரம் (30). இவரிடம் 2 பெண்களும், 3 ஆண்களும் வந்தனர். தஞ்சாவூர் பெரிய கோவில்,வேளாங்கண்ணி மற்றும் புதுக்கோட்டையின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி காரை வாடகைக்கு எடுத்தனர்.
5 பேரையும் ஏற்றிக் கொண்டு சுந்தரமே காரை ஓட்டிச் சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இரவு நேரத்தில் கார் சென்று கொண்டிருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத ஒதுக்குப்புறமானபகுதியில் சென்றபோது சிறுநீர் கழிக்க காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதையடுத்து காரை நிறுத்தினார் சுந்தரம்.
அப்போது 5 பேரும் சேர்ந்து சுந்தரத்தைத் தாக்கினர். மூன்று ஆண்களும் சுந்தரத்தைப் பிடித்துக் கொள்ள ஒரு பெண் ஊசி மூலம் மயக்கமருந்தை சுந்தரத்துக்கு செலுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் சுந்தரம் மயங்கி விழ காரைக் கடத்திக் கொண்டு 5 பேரும் தப்பிவிட்டனர்.
பல மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த சுந்தரம் காவல் நிலையம் சென்று புகார் தந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
கடத்தப்பட்ட அமைச்சரின் உறவினரின் கார் என்பதால் தேடுதல் வேட்டை தீவிரமாக உள்ளது.