ஸ்டெபானி கொலை: 800 பக்க குற்றச்சாட்டு
சென்னை:
சென்னையில் இளம் பெண்ணை ஈவ் டீசிங் செய்து கொன்ற வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், மொபட்டில் சென்ற இளம் பெண் ஸ்டெபானி என்பவர்இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு காரில் துரத்தியதால் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மாணவர் நெஸ்லே, பள்ளி மாணவர் டென்வர் (19 வயது), காரை ஓட்டி வந்த வெங்கடேசன், செல்போன்நிறுவன ஊழியர் ராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் டென்வர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். மற்ற 3 பேரும் சிறையில் உள்ளனர். அவர்களது ஜாமீன் மனு மீதானவிசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.
19 வயது பள்ளி மாணவர் இந்த ஈவ் டீசிங் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தபோது தமிழகம் அதிர்ந்தது. மேலும், அவர்கள்நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி விட்டு அங்கு நடனமாடிய பெண்ணை காரில் துரத்திச் சென்று கொன்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் பார்களைத் திறந்து வைக்கக் கூடாது, 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது பானம் விற்கக்கூடாது என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இந் நிலையில் ஸ்டெபானி வழக்கில் குற்றப் பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சங்கர் 800 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்தார்.
மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் 4 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டள்ளது. 53 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் 15ம் தேதி இந்தவழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்படும்.