காட்டு பங்களா சாலைக்கு தடை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் வழக்கு, சங்கர மடம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க ஒதுக்கப்பட்டுள்ள காட்டுப் பங்களாவின் வழியாக செல்லும்பொதுப்பாதையை போலீஸார் மூடி விட்டதால் 5,000க்கு மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ளது இந்த காட்டுப் பங்களா. பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானஇந்த பங்களாவுக்கு இரு பக்கமும் ஆட்சித் தலைவர் இல்லம், எஸ்.பி. இல்லம் உள்ளன.
நடுவே செல்லும் பாதை வழியாக மக்கள் புழங்கி வந்தனர். காஞ்சிபுரம்-வந்தவாசி மெயின் ரோடு, காஞ்சிபுரம்-உத்திரமேரூர் முக்கியச்சாலையை இணைக்கும் சாலையாக இது இருந்து வந்தது. மேலும் இப்பகுதியில் ஒரு மேல் நிலைப் பள்ளியும் சில நகர்களும் உள்ளன.
இந் நிலையில் திடீரென போலீஸார் இந்த சாலையை மூடி விட்டனர். இந்த சாலை வழியாக யாரும் செல்லக் கூடாது என்று போலீஸார்உத்தரவிட்டுள்ளனர். மேலும், கருவேல மரச் செடிகளை சாலையில் போட்டு தடுப்பும் ஏற்படுத்தியுள்ளனர்.
விசாரணை நடக்கும் பங்களாவிற்குள் யார் கொண்டு வரப்படுகிறார்கள், என்பதை பத்திரிககையாளர்களும் இந்த சாலை வழியாக இருந்துகொண்டுதான் கண்காணித்து வந்தனர். இப்போது இதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டு விட்டதால் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாதுஅப்பகுதியைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியச் சாலைக்கு செல்ல வேண்டுமானால் தற்போது 2 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.மாணவர்களுக்கும் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. அவர்களால் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.