மேலும் ஒரு சாலை பணியாளர் தற்கொலை
விழுப்புரம்:
விழுப்புரத்தைச் சேர்ந்த சாலைப் பணியாளர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட 20,000 சாலைப் பணியாளர்களை அதிமுக ஆட்சி நீக்கியது. இதை எதிர்த்து சாலைப்பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பைஎதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால் சாலைப் பணியாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் வேலையை இழந்து வறுமையில் வாடி வரும் பல சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். 2 நாட்களுக்குமுன்பு விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற சாலைப் பணியாளர் தீக்குளித்தார். அபாய நிலையில் இருந்த அவரை புதுவை ஜிப்மர்மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் மரணமடைந்தார். அதிக கடன் சுமை, வறுமை காரணமாக ஆறுமுகம் தற்கொலை செய்துகொண்டதாக சாலைப் பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.