ரவி சிக்கியது உறுதி: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் சென்னை அருகே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர், 3வது குற்றவாளியான கூலிப் படைத் தலைவன் அப்பு, கூலிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள், போலி குற்றவாளிகள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படையை ஏற்பாடுசெய்த ரவி சுப்ரமணியம் மட்டும் இன்னும் பிடிபடாமல் இருந்து வருகிறார்.
இந் நிலையில் சென்னை அருகே உள்ள படாளம் என்ற இடத்தில் கோயம்பேடு இன்ஸ்பெக்டரிடம் ரவிசுப்ரமணியம் சரணடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பு இது குறித்து உறுதிப்படுத்த மறுக்கிறது.
ஆனால், நேற்று முன் தினம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், விசாரணை அதிகாரியான எஸ்பி பிரேம்குமார்இப்போது ரவி சுப்பிரமணியத்தை கட்டுப்பாட்டில் எடுக்கச் சென்றுள்ளார். இதனால் தான் அவர் இன்று நீதிமன்றம் வரவில்லை என்றார்.
இதனால் ரவி சுப்ரமணியம் உண்மையிலேயே போலீஸ் பிடியில் சிக்கிவிட்டதாகவே தெரிகிறது. போலீஸ் வசம் வந்துள்ள ரவிசுப்ரமணியத்திடம் மகாபலிபுரம் செல்லும் வழியில் உத்தண்டி என்ற ஊரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணைநடத்தியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏதுவாக அவர் காஞ்சிபுரம் காட்டு பங்களாவில் வைக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications