வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா 11 ரன்கள் வெற்றி
சிட்டகாங்:
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியிருந்தது. இந் நிலையில் இன்று முதலாவது ஒரு நாள்கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் உள்ள அஸீஸ் மைதானத்தில் நடந்தது.
இந்திய அணியில் டோனி (விக்கெட் கீப்பர்), சர்மா (பந்துவீச்சாளர்) என்ற வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தமிழக வீரர்ஸ்ரீராம் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
டாஸ் வென்ற வங்கதேசம், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. பேட்டிங் ஜாம்பவான்கள் நிறைந்த இந்திய அணி, வளர்ந்துவரும் வங்கதேசத்திற்கு எதிராக 350 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடக்க ஆட்டக்காரராக சச்சினுடன் களமிறங்கிய கேப்டன் செளரவ் கங்குலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த யுவராஜ் சிங், சச்சினுடன் சேர்ந்து அடித்து ஆட ஆரம்பித்தார்.
இந்த ஜோடியும் அதிக நேரம் நிலைத்து நிற்கவில்லை. சச்சின் 19 ரன்களுடனும், யுவராஜ் சிங் 21 ரன்களுடனும் அடுத்தடுத்துஆட்டமிழக்க, இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
ஆனால் அடுத்த ஆட வந்த டிராவிட்டும், முகம்மது கைஃப்பும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். டிராவிட் 53 ரன்களும், கைஃப்80 ரன்களும் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் மளமளவென சரிந்தனர்.
கடைசி நேரத்தில் அகார்கரும் (25), பதானும் (21) அடித்து ஆடி இந்தியா கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினர். இறுதியில்இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
அடுத்த ஆடிய வங்கதேசம் தொடக்க ஆட்டக்காரர்கள் சீக்கிரம் இழந்தது. பஷார், மசூத் முறையே 65, 50 ரன்கள் எடுத்து அணியைசரிவிலிருந்து மீட்டனர். இறுதியில் 234 ரன்களுக்கு வங்கதேசம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பேட்டிங்கில்பிரகாசிக்காத ஸ்ரீராம் பந்துவீச்சில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் இந்தியா 11ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 80 ரன்கள் குவித்த கைஃப் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
2வது மற்றும் 3வது போட்டிகள் வரும் 26, 27ம் தேதிகளில் டாக்கா நகரில் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.