தேர்தல் ஆணையம் மீது ராமதாஸ் தாக்கு
சென்னை:
தமிழகத்தில் நடந்த தேர்தல் விதிமுறைகளைக் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம் லாலு பிரசாத் யாதவ் மீது மட்டும்நடவடிக்கை எடுத்துள்ளதாக பா.ஜ.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிகாரில் பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஏழைப் பெண்களுக்கு ரூ. 100கொடுத்த சம்பவம் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என்று கூறி தேர்தல் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பதவியில் இருந்தவர்களாலும் இப்போது பதவியில் இருப்பவர்களாலும் இதைவிடக் கடுமையானவிதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலின்போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்ட லக்னெள தொகுதியில் பா.ஜ.கவினர் வழங்கியஇலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 25 ஏழைப் பெண்கள் பலியானார்களே. அதை ஏன் தேர்தல் கமிஷன்கண்டுகொள்ளவில்லை?
தமிழகத்திலேயோ அதைவிட மோசம். அதிகார துஷ்பிரயோகத்தில் எல்லை கடந்திருக்கிறார்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள்.வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டுள்ளது, சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பெண் வாக்காளர்களுக்கு சேலை வழங்கப்பட்டது,லாரி லாரியாய் சில்வர் பாத்திரங்களை இறக்குமதி செய்து கொடுத்தார்கள்.
இதையெல்லாம் பத்திரிக்கைள் படம் பிடித்துப் போட்டன. தொலைக்காட்சிகளிலும் வந்தது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
ஆனால், இப்போது லாலு விஷயத்தில் ஒரு தொலைக்காட்சியில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து வழக்குப் பதிவுசெய்திருக்கிறது தேர்தல் கமிஷன். ஏன் இந்த இரட்டை நிலை?
பிகாரை தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருக்கும் லாலு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.இதனால் அவரை சிறுமைப்படுத்திப் பார்க்க முயலும் சக்திகளுக்கு தேர்தல் கமிஷன் துணை போகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
பிகாரில் இன்னும் தேர்தல் பணியே ஆரம்பிக்கவில்லை. அதற்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் லாலு தனது வழக்கமானபாணியில் ஏழைகளுக்கு செய்த நிதி உதவியை வைத்து விதிமீறல் வழக்குப் போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரை வந்த லாலுவைச் சந்திக்க ஏழை எளிய மக்களுக்கும் இதுபோல நிதியுதவி செய்தார் லாலு. அது அவர் பாணி.
ஆனால், பிகாரில் ஏழைப் பெண்களுக்கு ஒரு கூட்டத்தில் லாலு செய்த உதவியை மதவாத பிற்போக்கு சக்திகள் அரசியலாக்கிஆதாயம் தேட முயல்கின்றன. இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாகிவிடக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.