ஜெயலலிதாவின் அறியாமை: சு.சுவாமி தாக்கு
சென்னை:
ஜெயலலிதாவுக்கு இந்திய நாட்டின் கலாச்சாரம், வரலாறு தெரியவில்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஊர்ப் பெயர்கள், தூரம் ஆகியவை இந்தியில் எழுதியிருப்பதை ஆட்சேபித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்தச் செயல் அவரது இந்திய மொழிகள் பற்றிய அறியாமையையே வெளிப்படுத்துகிறது.
தமிழகத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஆகவே தமிழ் மற்றும் இந்தி எழுத்தில் மைல் கற்களில் எழுதப்படுவது அனைத்து இந்திய மக்களுக்கும் வசதியாக இருக்கும்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஊக்கத்துடன் தொடங்கப்பட்ட திராவிட இயக்கங்களில் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஜெயலலிதாவுக்கு இந்திய நாட்டின் கலாச்சாரம், வரலாறு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஜெயலலிதா தனது நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி, இன்டர்நெட்டுக்குப் போய், இந்தியாவின் புராதன சிறப்பை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தி வேண்டாம் என்றெல்லாம் பேசி தனது அறியாமையை வெளிப்படுத்தாமல் இருப்பது ஜெயலலிதாவுக்கு நல்லது.
இவ்வாறு சுவாமி கூறியுள்ளார்.