கிறிஸ்துமஸ் காரணமாக உயிர் தப்பிய குமரி மீனவர்கள்
நாகர்கோவில்:
கிறிஸ்துமஸ் அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் 99 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். எப்போதுமே ஞாயிற்றுக்கிழமை அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள், தேவாலயங்களுக்குத்தான் செல்வார்கள்.
சனிக்கிழமை கிறிஸ்துமஸ் தினம் என்பதாலும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இரு நாட்களுமே கடலுக்கு எந்த மீனவருமேசெல்லவில்லை. இதனால் கடல் கொந்தளிப்பின் பேரழிவில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
அவர்கள் மட்டும் கடலுக்குள் சென்றிருந்தால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதத்தை கன்னியாகுமரி கண்டிருக்கும். விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலை உள்ள பாறை ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கும் முயற்சிகளில் குமரிமீனவர்களும் முழு வீச்சில் இறங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது.