பாண்டிச்சேரி: பலியானோர் எண்ணிக்கை 377 ஆனது
பாண்டிச்சேரி:
கடல் கொந்தளிப்பு காரணமாக பாண்டிச்சேரி மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துவிட்டது.
கடல் கொந்தளிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடலூரில் பலியானவர்களின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. 300 பேரின் உடல்கள் கடலூரில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
காரைக்காலில் 265 பேரும் மற்றவர்கள் பாண்டிச்சேரியிலும் பலியானதாக அம் மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். வீடு,உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசியும் தலா ரூ. 2,000மும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் மீட்புப் பணிகளில் உதவுமாறு கடற்படைக்கு ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15,000 பேர் வீடிழந்தனர். மேலும் 900 பேரைக் காணவில்லை.
இந் நிலையில் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.25 கோடி நிதியுதவியை பாண்டிச்சேரிக்கு வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன் ஆகியோரும் கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுபார்வையிடுகின்றனர்.