இனி சனிக்கிழமையும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் இயங்கும்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் ஜனவரி 1ம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தனியார் துறையில் பணியாற்றும் பலருக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை நாளாகும்.
எனவே புதிய ஓட்டுனர் உரிமம் பெற விரும்புவோர், புதுப்பிக்க விரும்புவோர், பழகுனர் உரிமம் பெற விரும்புவோர் விடுப்பு எடுத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களுக்கு வர வேண்டியுள்ளதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக முதல்வருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து தனியார் துறையினருக்கும் பலன் அளிக்கும் வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் சென்னை மாநகரம், மீனம்பாக்கம், செங்குன்றம் ஆகியஇடங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.