நாகூர் தர்காவின் மதம் கடந்த நிவாரணப் பணி
நாகப்பட்டினம்:
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத வேற்றுமையின்றி நாகூர் தர்கா உதவி அளித்து வருகிறது.
447 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாகூர் மீரான் தர்காவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதும் 5,000 பேருக்கு புகலிடம் தரப்பட்டது.இப்போதும் இங்கு 1,000 பேர் வரை தொடர்ந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு தர்கா மூலமாக தொடர்ந்து உணவும் அளிக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக நிருபர்களிடம் தர்காவின் ஜமாத் உறுப்பினர் சாகுல் ஹமீது கூறுகையில்,
கடந்த 7 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளித்து வருகிறோம். இதற்காக 15 இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுஅமைக்கப்பட்டு உள்ளது. ஏராளமான தொண்டு நிறுவனங்கள் தர்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
முதல் இரண்டு நாட்களின்போது, சடலங்களைத் தேடும் பணியில் ஜமாத் உறுப்பினர்களும், உயிர் தப்பிய மீனவர்களும் ஈடுபட்டனர். 50குழந்தைகள் உட்பட 200 பேரின் சடலங்கள் தர்காவிற்குச் சொந்தமான மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன என்றார்.
தர்காவில் தங்கியிருக்கும் மக்களில் சிலரை நிருபர்கள் சந்தித்தபோது,
சுனாமி அலையின் பயம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. நாகூர் கடல்பகுதியில் இரண்டு கிராமங்கள் சுத்தமாக அழிந்துவிட்டன.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பணமும், நிவாரணப் பொருட்களும் எங்களை வந்து சேர்ந்து விட்டன. மாவட்ட நிர்வாகம்வழங்கவிருக்கும் வீடு மற்றும் படகுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றனர்.