பூக்கட்டும் புதுவாழ்வு: ஜெ பொங்கல் வாழ்த்து
சென்னை:
பொங்கட்டும் பொங்கல், பூக்கட்டும் புதுவாழ்வு, மங்கலப் பொங்கல் நாள் மகிழ்ச்சிதனைப் பெருக்கட்டும் என முதல்வர் ஜெயலலிதா தனதுவாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி:
மங்கலப் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற வள்ளுவப் பெருமானின் வாக்குக்கு இணங்க, இந்த உலகம் உழவர் பெருமக்களின் பின் செல்கின்றது.அந்த உழவர் பெருமக்கள் தங்கள் உழைப்பின் பயனைப் பெற்று உவகை அடையும் நாள் இந்த பொங்கல் திருநாள்.
இயற்கைப் பேரிடர் கடலோரத் தமிழகத்தை சிதைத்து விட்ட வேளையிலே பிறந்திருக்கிறது இந்தத் தைத் திங்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். பிறக்கின்ற தைத் திருநாள் தமிழர்க்குப் புதுவாழ்வு அளிக்கின்ற திருநாளாக மலரட்டும். புதிய நம்பிக்கையைஅளிக்கின்ற திருநாளாக மலரட்டும்.
இயற்கைக்கு அஞ்சி வாழாமல் இயற்கையை வென்று வாழ்வதில்தான் மானுடத்தின் வெற்றி அமைந்திருக்கின்றது. மனித குல வரலாறுநமக்குக் கற்றுத் தருகின்ற மகத்தான பாடம் இதுதான். எனவே நம்பிக்கை கொள்வோம், இயற்கைப் பேரிடரான சுனாமியால் நிலை குலைந்தமக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப ஏற்ற பணி புரிவோம்.
பொங்கட்டும் பொங்கல், பூக்கட்டும் புதுவாழ்வு, மங்கலப் பொங்கல் நாள் மகிழ்ச்சிதனைப் பெருக்கட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications