சுனாமி: இறந்தவர்களின் நினைவாக மரக் கன்றுகள்
நாகப்பட்டனம்:
சுனாமிக்கு பலியானவர்களின் நினைவாக அவர்கள் புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட இடத்தில் தென்னங் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாகை மாவட்டத்தில்தான் அதிகம். இங்கு மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் பல்வேறு கிராமங்களில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளன அல்லது எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறந்தவர்களின் நினைவாக அவர்கள் புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட இடங்களில் தென்னங்கன்றுகளை நட்டு வருகிறார்கள்அவர்களது குடும்பத்தினர்.
உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட்டவரின் பெயரை ஒரு தட்டியில் எழுதி வைத்து அதன் கீழே ஒரு தென்னங்கன்றுநடப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை இழந்த காமேஸ்வரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் என்பவர் இதுகுறித்துக்கூறுகையில்,
எங்களது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுனாமியால் இறந்து விட்டனர். அவர்களை நினைவு கூற தென்னங் கன்றுகளை நட்டு வைக்க முடிவுசெய்தேன்.
இதைத் தொடர்ந்து எனது தந்தை வெற்றிவேல், தாயார் குப்பம்மா, சகோதரி சத்யா, சகோதரனின் மனைவி நாகலட்சுமி, அவரது குழந்தைமாயம்மா, ஒரு வயதுக் குழந்தை கவிதா ஆகியோரின் நினைவாக 6 தென்னங் கன்றுகளை அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நட்டுவைத்துள்ளேன் என்றார் காத்தவராயன்.
காத்தவராயன் குடும்பத்தில் அவரும் அவரது தங்கை ஆரவல்லியும் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். இருவரும் தினசரிதென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
இதேபோல, செருதூர் பகுதியைச் சேர்ந்த புனிதா என்ற 9 வயது சிறுமி, தனது சகோதரி உஷா, சகோதரர்கள் மகேந்திரன், குணசேகரன்ஆகியோரின் நினைவாக 3 தென்னங்கன்றுகளை நட்டுள்ளார். புண்ணியவதி என்ற 11 வயது சிறுமி தனது தங்கை ரஷியாவின் நினைவாகஒரு மரக் கன்றை நட்டுள்ளார்.
மரக் கன்றுகள் நடுவதற்கு என்ன காரணம் என்று இவர்களிடம் கேட்டால், இறந்தவர்களின் நினைவாக மட்டும் இதை நாங்கள்வளர்க்கவில்லை. எதிர்காலத்தில் இந்த மரங்கள் வளர்ந்து தோப்பாகி, கடல் சீற்றத்தின்போது தண்ணீரை ஊருக்குள் விடாமல் தடுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு கேடயமாக அமையும் என்ற நம்பிக்கையிலும்தான் மரங்களை வளர்க்கிறோம் என்கிறார்கள்.
இப்படி மரம் வளர்க்கும் ஐடியாவைக் கொடுத்தது, நாகை மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சாஹு. இவர்தான்காமேஸ்வரம், செருதூர் ஆகிய கிராமங்களில் மரம் வைப்பதை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து கடலோர கிராம மக்களிடையேமரம் வைப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டு இன்று பல்வேறு கிராமஙகளிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
கடலோர கிராமங்களில் மட்டுமல்லாது தற்காலிக முகாம்களிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணனும் இதை ஊக்கப்படுத்துகிறார்.