அதிமுகவை மதிக்காத தவெக! வேலுமணி டீமுக்கு செம்மலை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
சேலம்: அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என முன்னாள் அமைச்சர் செம்மலை வேதனை தெரிவித்துள்ளார். அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளால் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கட்சி பலவீனப்பட்டுக் கொண்டே போகிறது. மூத்த தலைவர்கள் தங்களது ஈகோவை கைவிட வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.கவை காப்பாற்றுவது கடினம்.

அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் வேறு எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனது விலகலுக்கு பிறகாவது அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்கள் அமர்ந்து பேசினால் ஒற்றுமை நிலவும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் அதிமுகவில் வென்ற 47 எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் எஸ்பி வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி அணியினர் கொறடா, சட்டசபைக் குழுத் தலைவர் உள்ளிட்டோரை நியமித்தது போல் எஸ்பி வேலுமணி தரப்பும் நிர்வாகிகளை நியமித்து சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்கள்.
அது போல் தவெக அரசு கோரிய நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறடா அக்னி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில் வேலுமணி தரப்பை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். தவெக அரசுக்கு ஆதரவு என அதற்கு முந்தைய நாள் சிவி சண்முகம் தரப்பு அறிவித்த மாலையே சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்றிருந்தார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் அதிமுகவின் ஒரு தரப்பை விஜய் சந்தித்தது பேசு பொருளானது. தற்போது யார் உண்மையான அதிமுக என்ற போட்டியும் நிலவி வருகிறது. எதிர் தரப்பை சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார்.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி, வாரிய பதவிகள் தருவதாக ஆசை வார்த்தை கூறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருந்த செம்மலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ஆதரவு கொடுத்த அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி என விஜய் இது வரை அறிவிக்காததால் அவர் அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என செம்மலை விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications