ஆசிரியை மாயம்: எம்.எல்.ஏ கடத்தினாரா?- நீதிமன்றத்தில் டிஜிபி ஆஜர்
மதுரை:
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி அலெக்சாண்டர் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த அக்டோபர் மாதம் காணாமல் போய் விட்டார். இவரை அதிமுகஎம்எல்ஏ பாப்பா சுந்தரம் கடத்தியதாக அப் பகுதியில் பேசப்படுகிறது.
இதனால் மீனாட்சியைக் காணவில்லை என்று அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் தந்த புகாரை காக்கிச் சட்டைகள் சட்டை செய்யவில்லை.
இதையடுத்து தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்ஜோதி ராமலிங்கம்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினகரன், அசோக்குமார் ஆகியோர், போலீஸ் விசாரணை படு மந்தமாகவும், குளித்தலை அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்திற்கு ஆதரவாகவும் இருப்பதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விரைவாக விசாரித்து ஜனவரி 18ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டிருந்தனர்.
உயர் நீதிமன்றக் கிளையின் கண்டனத்தையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார்விசாரணையை முடுக்கி விட்டு அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனாலும் மீனாட்சியைக் கண்டுபிடிக்கவில்லை.
இந் நிலையில் நீதிமன்றத்தின் கெடு இன்றுடன் முடிவடைவதால் போலீஸ் தரப்பு விளக்கத்தைத் தர டிஜிபி அலெக்சாண்டரே இன்று மதுரைஉயர் நீதிமன்றக் கிளையில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 4 வாரங்கள் அவகாசம் கேட்டார் அலெக்ஸாண்டர்.
ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் தினகரன், அசோக்குமார் ஆகியோர் நிராகரித்தனர். இன்னும் 2 வாரங்களுக்குள் விசாரணைமுடித்து பிப்ரவரி 7ம் தேதியன்று வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.