அப்பு மீதான வழக்கை விசாரிக்க தடை இல்லை!
சென்னை:
மார்வாடியை மிரட்டி அவர் மீது வெடிகுண்டு வீசியதாக அப்பு மீது தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க தடை இல்லை என்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பிரேம் சந்த். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை தரம்சந்த் என்பவருக்கு ரூ. 1.75 கோடிக்கு விற்றார்.ஆனால் தரம்சந்த் முழுப் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
நிலத்தை விற்ற பிரேம் சந்த், மீதப் பணத்தைக் கொடுக்குமாறு தரம்சந்தை கேட்டுள்ளார். இதையடுத்து தரம்சந்த், அப்புவின் உதவியைநாடியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பு பிரேம்சந்த்தை மிரட்டியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அவர் மீது வெடிகுண்டு வீசிக் கொல்லவும் முயற்சித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு வெடிகுண்டுகள் தொடர்பானவழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோரி அப்பு தொடர்ந்த மனுவின் பேரில் வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருந்தது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்கலாம் எனஉத்தரவிட்டார்.