ரவி சுப்பிரமணியத்தை மன்னித்த காஞ்சி. கோர்ட்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை காஞ்சிபுரம் நீதிமன்றம் மன்னித்து வழக்கிலிருந்து விடுவித்துள்ளதாகஎஸ்.பி.பிரேம்குமார் கூறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் மீதும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில்நேற்று பிற்பகல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 25 பேர் மீதும் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனை, ஆயுள்தண்டனை, 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில், அனைத்துப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.
இதில் இதுவரை 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவிசுப்பிரமணியம் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்குமாறாக அரசுத் தரப்பில் முதல் சாட்சியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி. பிரேம்குமார் கூறுகையில், ரவிசுப்பிரமணியம் அரசுத் தரப்பு முதல் சாட்சியாக மாறியுள்ளார். அவரை காஞ்சிபுரம்முதலாவது குற்றவியல் நீதிமன்றம் மன்னித்து வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இருப்பினும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில்அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார்.
ரவி சுப்பிரமணியத்தின் சாட்சி வழக்குக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார் பிரேம்குமார்.
சங்கரராமன் கொலை தொடர்பாக அனைத்து விவரங்களையும் அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளார். ஒரு வேளை சாட்சியத்தைமாற்றிக் கூறினால் மீண்டும் அவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்போம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரவிசுப்பிரமணியத்தின் அப்ரூவர் சாட்சியம் நிற்காது என்று சங்கர மட வழக்கறிஞர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அவர்கூறுகையில், அப்ரூவர் சாட்சியத்தை மட்டும் வைத்து ஒருவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட முடியாது.
குற்றத்திற்கு நேரடியாகாவோ, மறைமுகமாகவோ சாட்சியங்கள் தேவை. ஆனால் ரவிசுப்பிரமணியம் கூறும் எதையும் சாட்சியமாக ஏற்கமுடியாது. இந்த வழக்கில் நேரடி மற்றும் மறைமுக சாட்சிகள் எதுவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications