இராக் தேர்தல் ஒரு வரலாற்று சாதனை: புஷ்
பாக்தாத்:
இராக் தேர்தல் ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனை என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் மக்களுக்குத் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இராக்கில் அதிபர் சதான் உசேனின் ஆட்சி அகற்றப்பட்ட பின்பு, முதன் முறையாக ஜனநாயக முறைப்படி நேற்று தேர்தல் நடைபெற்றது.தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்தலின்போது வாக்குச்சாவடிகள் மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். ஒரு அமைச்சரின் வீட்டின் மீதும்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் 30 பொதுமக்கள், 6 போலீஸார், ஒரு அமெரிக்க ராணுவ வீரர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இருப்பினும் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அமெரிக்காவும், இராக் இடைக்கால அரசும் தெரிவித்துள்ளன. இராக் தேர்தல்அதிகாரி கூறுகையில்,
8 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்தனர். இது 60 சதவீத வாக்காளர்களின் எண்ணிக்கையாகும். இது முதல்கட்ட தகவலேயாகும்.எதிர்பார்த்ததை விட தேர்தல் சிறப்பாக நடைபெற்றது என்றார்.
ஜார்ஜ் புஷ்:
இத் தேர்தல் குறித்து வெள்ளை மாளிகையில் ஜார்ஜ் புஷ் கூறியதாவது:
இது மகத்தான வரலாற்றுச் சாதனை. மிகப் பெரும் சவாலுக்கிடையே ஜனநாயகத்தில் தங்களுக்குள்ள ஆர்வத்தை இராக் மக்கள்நிரூபித்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயக விரோத சக்திகளின் கொள்கைகளை நிராகரித்துள்ளனர்.
நாட்டை ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்ல இராக் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும்.ஜனநாயகப் பாதையில் அவர்கள் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இத் தேர்தல் மூலம் இராக் மக்கள் உலக நாடுகளுடன் பேசியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் மையத்தில் இருந்து எழுந்துள்ளசுதந்திரத்தின் குரலை உலகம் கேட்கிறது. இந்த தேர்தலை வெற்றியின் குரலாக இராக் மக்கள் தான் மாற்றினர்.
தீவிரவாதிகள் ஜனநாயகத்திற்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவார்கள். அவர்களுக்கு எதிரான போரில் இராக் மக்களுக்கு நாங்கள்உறுதுணையாக இருப்போம். இராக் ராணுவம் முழு பலம் பெறும் வரையில் அமெரிக்கா ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும்.அதன்பின்னரே இராக்கை விட்டு அது வெளியேறும் என்று கூறினார்.
டோனி பிளேர்:
இதற்கிடையே, இராக் தேர்தல் சர்வதேச பயங்கரவாதத்திற்கு விழுந்த மிகப் பெரும் அடியாகும் என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்கூறினார்.
அவர் கூறியதாவது:
இங்கிலாந்து உட்பட உலகின் முக்கிய நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் சர்வதேச பயங்கரவாதத்தின் இதயத்தில் விழுந்த பலத்தஅடிதான் இராக் தேர்தல். இத் தேர்தல் மூலம் சுதந்திரத்தின் சக்தி இராக் முழுவதும் பரவியுள்ளது என்றார்.