பீகாரில் நாளை முதல் கட்ட தேர்தல்
பாட்னா:
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளமும்,ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் இந்தத் தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கட்சியுடன் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வைத்துள்ளது.
இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், ஹிசூவா மற்றும் பக்ஸர் தொகுதியில் இருகட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. லோக் ஜனசக்தி 45 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் போட்டியிடும்என்றும், கோஷி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஜகதீஸ் சர்மாவை ஆதரிப்போம் என்றும் முன்பு பாஸ்வான் கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு மாறாக 52 இடங்களில் லோக் ஜனசக்தியும், 21 இடங்களில் காங்கிரசும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
தொடக்கத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் போட்டியிடும் இடங்களில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தாது என்று அறிவித்திருந்தது.ஆனால் சேனாரி தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளருக்கு எதிராக தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் கஹல்கான் தொகுதியை மட்டுமே ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரசுடன் பகிர்ந்துள்ளது.இந்தத் தொகுதியில் கடந்த முறை சபாநாயகர் சதானந்த் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளம் 36 இடங்களிலும் பாஜக 27 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கோஷிதொகுதியில் இக் கூட்டணி போட்டியிடவில்லை.
இது தவிர பகுஜன் சமாஜ் கட்சி 64 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 33 தொகுதிகளிலும், சிபிஐ- எம்.எல். 32 தொகுதிகளிலும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், சிபிஎம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மொத்தம் 826 வேட்பாளர்கள் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications