சுனாமி: 26 பேர் ஜாமீனில் விடுதலை
சென்னை:
சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 26 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 38 கைதிகள், தங்களது குடும்பங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உதவ தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழ்நாடு இலவச சட்ட உதவி ஆணையத்திடம் மனு கொடுத்தனர்.
இவர்களது மனுவைப் பரிசீலித்த ஆணையம், சாதாரண குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 பேரை சொந்த ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. விடுதலை செய்யப்பட்டுள்ள 26 பேரில் 3 பேருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆணைய உறுப்பினர் செயலாளர் எம்.ஜெயபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 23,000 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முகாம் நடத்தி 750 மனுக்களைப் பரிசீலித்து நிவாரணம் கிடைக்க உதவியுள்ளோம். இதுபோல மற்ற இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படும்.
சாதாரண குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு கால தாமதம் ஆவதால் பல மாதங்களாக அவர்கள் சிறையில் இருக்க நேடுகிறது. இதைத் தவிர்க்க, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டு, 3 அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு விடுதலை ஆக வகை செய்யும் விதத்தில் கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் 173வது பிரிவில் திருத்தம் தேவை. இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம் என்றார் ஜெயபால்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 70,000 செக் மோசடி வழக்கு இருப்பதாகவும் ஜெயபால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications