சங்கரராமன்: குருவி ரவி, சதீஷ் மீதும் குண்டாஸ்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குருவி ரவி, சதீஷ் ஆகியோர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனர்.
இதன் மூலம் இந்த வழக்கில் கைதான மொத்தம் 25 பேரில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துவிட்டது.
இதில் குருவி ரவி 15வது குற்றவாளியாகவும், சதீஷ் 18வது குற்றவாளியாகவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை தயார் செய்து சரணடைய வைத்தவர்களாவர்.
போலீசாரின் பரிந்துரையை ஏற்று இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் இதுவரை அப்பு, சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன், சின்னா என்ற ரஜினிகாந்த், அம்பி என்ற அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், மீனாட்சிசுந்தரம், ஆனந்தகுமார், அனில் குமார், குமார், தில் பாண்டியன், ஆறுமுகம், சதீஷ், குருவி ரவி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.
அப்ரூவராக மாறிவிட்ட ரவி சுப்பிரமணியம் தவிர மற்ற அனைவர் மீதுமே அடுத்தடுத்து குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. இந்த வரிசையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் தப்புவார்களா அல்லது அவர்கள் மீதும் அரசு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை.
இது குறித்து அரசு வழக்கறிஞர் துரைசாமி அளித்த சிறப்புப் பேட்டியில், இப்போதுள்ள ஆதாரங்கள், சாட்சிகளின் அடிப்படையில் சங்கராச்சாரியார்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய வாய்ப்பில்லை. ஆனால், மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்கள், விசாரணையில் கிடைக்கும் விவரங்களை வைத்துத் தான் எந்த நடவடிக்கையும் இருக்கும் என்றார் பட்டும்படாமல்.