கலாமுக்கு எலும்பு முறிவு: ஆபரேசன் முடிந்தது
டெல்லி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடைபயிற்சியின்போது வழுக்கி கீழே விழுந்ததில், வலது தோள்பட்டையில் சிறிய எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து இன்று அவருக்கு "closed reduction" என்ற நவீன எலும்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மூலிகை பூங்காவில் கலாம் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது இச் சம்பவம்நடந்தது. தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ளராணுவ மருத்துவமனையில் கலாம் சேர்க்கப்பட்டார்.
இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பதிலாக சிறியஅளவில் ஒரு நவீன ரக எலும்பு சிகிச்சை மட்டும் செய்யப்பட்டது. அனஸ்தீசியா தரப்பட்டு இந்த சிகிச்சை செய்யப்பட்டது. காலை10 மணியளவில் இந்த சிகிச்சை நடத்தப்பட்டது.
இச் சிகிச்சைக்கு சிறிது நேரத்துக்குப் பின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெ.ஜே. சிங்கை கலாம் சந்தித்தார். கலாம் வேகமாக தேறிவருவதாகவும் அவர் கலகலப்பாக இருப்பதாகவும் ராணுவ டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள தனது அண்ணனையும் கலாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த எலும்பு முறிவு காரணமாக நாளை கலாம் தலைமையில் நடைபெறவிருந்த ஆளுனர்கள் மாநாடுஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
முன்னதாக கலாமை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.