ஆசிரியை மாயமான வழக்கு: 2 போலீஸார் சஸ்பெண்ட்!
கரூர்:
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மீனாட்சியை கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி முதல் காணவில்லை. தனது மனைவி காணாமல் போனதற்கு குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன் ஆகியோரே காரணம் என்று மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் புகாரைக் கண்டு கொள்ளாததால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள், போலீஸாரை சரமாரியாக விமர்சித்தனர், விசாரணை என்ற பெயரில் போலீஸார் விளையாடிக் கொண்டிருப்பதாக கடுமையாக சாடினர்.
இதைத் தொடர்ந்து டிஜிபி அலெக்சாண்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராக விளக்கம் அளித்தார்.
பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாககரன், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன், மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் பல கட்டங்களாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் இன்று முதல் கட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தாக வேண்டும்.
இதற்கிடையே, மீனாட்சியின் கணவர் கொடுத்த புகாரை முதலில் பதிவு செய்த மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமைக் காவலர் ஆறுமுகம் ஆகியோரை கரூர் மாவட்டக் கண்காணிப்பாளர் அபின் தினேஷ் மோடக், தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் சில அதிகாரிகளும் சஸ்பெண்ட் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரத்தை காப்பாற்றுவதிலேயே போலீசார் அதிக அக்கறை காட்டி வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications