சங்கராச்சாரியார்களுக்கு நாளை குற்றப் பத்திரிக்கை: குண்டர் சட்டம் பாயுமா?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் நாளை குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவுள்ளது.
இதற்காக இவர்கள் அனைவரும் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜன் முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதில் ஜெயேந்திரர் தவிர மற்ற அனைவரும் சிறைகளில் இருப்பதால் அவர்களை போலீசார் அழைத்து வரவுள்ளனர்.
ஜெயேந்திரர் தானாகவே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
விஜயேந்திரர் மீது குண்டர் சட்டமா?
இந்தக் கொலை வழக்கில் கைதான 25 பேரில், இதுவரை 16 பேர் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் கூட வெளியில் வர முடியாத அளவுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
மேலும் இருவர் ஜாமீனில் விடுதலையாகிவிட்டனர்.
அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியம், ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் உள்பட மேலும் 7 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
இந் நிலையில் குற்றப் பத்திரிக்கை நகல் தரப்பட்ட கையோடு மிக விரைவில் விஜயேந்திரர் மீதும் விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என்று கூறப்படுகிறது.
குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்ட பின் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தொடங்கிவிடும். காஞ்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
விசாரணையை தினமும் நடத்தி மிக விரைவிலேயே தீர்ப்பைப் பெற போலீசார் மும்முரமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications