மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: கமிஷனுக்கு அதிமுக கடிதம்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து விசாரைண செய்து கேரள மாநிலத் தேர்தல் அதிகாரி தாமஸ் தாக்கல் செய்த அறிக்கையின் நகலைக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கருத்து தெரிவிக்கையில், அரசியலில் சுனாமி ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்றார். இந் நிலையில் தாமஸ் அறிக்கையின் நகலைக் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு அதிமுகவின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே ஒரு தலைப்பட்சமான முடிவுகள் வெளிவந்தன. இந்த முறைகேடுகளுக்கு எதிராக, தேர்தல் நடந்த தினமான கடந்த வருடம் மே 10ம் தேதி முதல் அதிமுக போராடி வருகிறது.
அதிமுகவின் முயற்சி காரணமாகவே இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது எங்கள் கட்சியின் நிலைப்பாடு சரி என்பதைக் காட்டுகிறது.
இத்தகைய முறைகேடுகள் காரணமாக, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறோம். அதற்காக தாமஸ் அறிக்கையின் நகலைக் கேட்டு தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications