கிலானி மீது துப்பாக்கி சூடு: டெல்லி போலீஸ் சதி?
டெல்லி:நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலையான பேராசிரியர் கிலானி மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த கிலானி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கிலானி, அப்ஸால், ஷாகுத் ஹூசைன், அவரது மனைவி நவ்ஜோத் சந்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கிலானியை நிரபராதி என்று விடுதலை செய்தது. மற்ற 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பளித்தது. கிலானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இந் நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு கிலானி தனது வழக்கறிஞர் நந்திதா ஹக்சரை அவரது வீட்டில் சந்தித்து விட்டு, வெளியே வரும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இதனையடுத்து அவர் அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து கிலானியின் வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான நந்திதா ஹக்சர் கூறுகையில்,
கிலானிக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடந்தது. இருப்பினும் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே உள்ளார்.
அவரது உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்பது குறித்து எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. குறைந்தது 2 குண்டுகள் பாய்ந்திருக்கலாம். ஒரு குண்டு வயிற்றிலும், மற்றொன்று தோளிலும் பாய்ந்திருக்கிறது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் டெல்லி போலீஸார் இருப்பதாக கிலானியின் நண்பர்கள் கூறுகிறார்கள். அது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அவர் தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
அவர் கோவாவில் எனது வீட்டில் தங்கியிருந்தபோது கூட, வெளியே போலீஸார் இருந்தனர் என்றார்.
தாக்குதல் குறித்து போலீஸார் தெரிவிக்கையில், தாக்குதல் நடத்தியவர்கள் கிலானியை நோக்கி 5 முறை சுட்டதாகவும், அதில் 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்ததாகவும் தெரிவித்தனர். இது குறித்து டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே கிலானியின் நண்பர்கள் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
கிலானியுடன் குடும்பத்தினர் சந்திப்பு:
இதற்கிடையே கிலானியை அவரது குடும்பத்தினர் இன்று காலை சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பின் கிலானியின் சகோதரர் பிஸ்மில்லா கிலானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கிலானியின் உடல் நிலை சற்று முன்னேற்றமடைந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது. எங்களுடன் சிறிது நேரம் பேசினார்.
வயிறு, அடிவயிறு, வலது தோள் ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்திருந்தது. அந்தக் குண்டுகள் அகற்றப்பட்டு விட்டன என்றார்.
உச்ச நீதிமன்றம் கேள்வி:
இந் நிலையில் கிலானியின் மீதான தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரைண அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.