விசாரணைக்கு வராத திருக்குறுங்குடி நிர்வாகிகள்
காஞ்சிபுரம்:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த திருக்குறுங்குடி கோவில் நிர்வாகிகள் 4 பேரும் இன்று காஞ்சிபுரம் வரவில்லை.
நெல்லை மாவட்டம் வள்ளியர் அருகே திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் கோவில் உள்ளது. இக் கோவிலில் இருந்த சிவன் சன்னதி, ஜெயேந்திரர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இதை திருக்கோட்டியூர் மாதவன் கடுமையாக கண்டித்தார்.
இதைத் தொடர்ந்து மாதவன் சென்னையில் வைத்து தாக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை, காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் திருக்குறுங்குடிக்குச் சென்று கடந்த வாரத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சியம் அளித்த திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் முருகேசன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கோவில் மேலாளர் திருநாராயணன், நம்பிப் பாண்டியன், ராதா உள்ளிட்ட 4 பேருக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு அவர்கள் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நால்வரும் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயக் கூடும் என்று தெரிகிறது.