ரஜினி வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rajiniநடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாபா படத்தை தியேட்டர்களுக்கே நேரஐயாக விற்றார் ரஜினி. இதன்மூலம் ரூ. 5 கோடியில் தயாரான அந்தப் படம் ரூ. 55 கோடிக்கு விலை போனது. இது குறித்த பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக வைத்து ரஜினியை நேரில் அழைத்து விசாரித்தது வருமான வரித்துறை.

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை இன்வஸ்டிகேசன் பிரிவுக்கு தனது ஆடிட்டர்களுடன் நேரில் வந்து விளக்கம் தந்துவிட்டு வரியையும் முன் கூட்டியே கட்டிவிட்டுத் திரும்பினார் ரஜினி.

இந் நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகி படமும் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பூஜையன்றே படம் விற்பனையாகிவிட்டது.

இதைத் தயாரிப்பது சிவாஜி பிலிம்ஸ் தான் என்றாலும் படத்திற்கு ரஜினிக்கு மாபெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகம் உள்ளிட்ட சில ஏரியா உரிமைகளையும் ரஜினி எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னையில் தற்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. நேற்று மாலை ரஜினி தனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் தியேட்டருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது பல கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திறங்கினர்.

வீட்டைச் சோதனையிட வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கவே ரஜினி தனது டப்பிங் வேலையை ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருந்தார். அப்போது ரஜினியின் மனைவி லதாவும் உடனிருந்தார்.

ரஜினி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கிய சில ஆவணங்கள் குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப வரவு, செலவுகள் பற்றியும் விசாரித்தனர். மேலும் ஐஸ்வர்யா-தனுஷ் திருமண செலவுகள், தனுசுக்கு ரஜினி புதிதாக பல கோடியில் வாங்கித் தந்ததாகக் கூறப்படும் பங்களா ஆகியவை குறித்தும் விசாரணை நடத்தினர்.

தெலுங்கில் எடுக்கப்படும் சந்திரமுகி ரூ. 30 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுவது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

சில குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் கையோடு எடுத்துக் கொண்ட அதிகாரிகள் மேலும் பல சொத்துப் பத்திரங்களுக்கு வீட்டிலேயே சீல் வைத்து விட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆவணங்கள் குறித்து ரஜினி தனது ஆடிட்டர் மூலம் உரிய விளக்கம் அளிப்பதாக கூறியிருக்கிறார். இந்த சோதனை காரணமாக சந்திரமுகியின் 2ம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி, ஹைதராபாத் செல்ல வேண்டிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஜினி வரி பாக்கி எதையும் வைத்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது வருமான வரித்துறை, திமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்தின் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இச் சோதனைகளில் திமுகவின் கைவண்ணமும் இருக்குமோ என்ற சந்தேகமும் ரஜினி தரப்பில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினி வீட்டில் திடீர் சோதனை குறித்து அறிந்ததும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் என ரஜினி வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+