விபத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி படுகாயம்
சென்னை:
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் அரசியல் பிரிவு ஆலோசகராக பணியாற்றும் புரூஸ் எம். குயின் (45) கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் அரசியல் பிரிவு ஆலோசகராக பணியாற்றும் புரூஸ் எம். குயின் (45) கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார்.
புரூஸ் எம். குயின் நேற்றிரவு 11.50 மணிக்கு தூதரக காரில் ஆர்.ஏ. புரம் பிஷப் கார்டனில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காளியப்பா மருத்துவமனை சந்திப்பு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கார் மோசமாக சேதமடைந்தது. புரூஸ் எம். குயினின் 2 கால்களும் காரில் சிக்கிக் கொண்டதால், அவரால் வெளியே வர முடியவில்லை.
அப்பகுதியிலிருந்த பொதுமக்களும் ஆட்டோ டிரைவர்களும் சேர்ந்து கடப்பாறையைக் கொண்டு காரை உடைத்து அவரை வெளியே எடுத்தனர். இடது கால் மூட்டு மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
முதலில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புரூஸ் பின்னர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்ல தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து லாரி டிரைவர் துரையைக் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.