காஞ்சி மட வங்கிக் கணக்குகள் முடக்கம் ரத்து!
சென்னை:
தமிழக அரசால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த சங்கர மடத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சங்கரராமன் கொலையாளிகளுக்கு மடத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து தான் பணம் எடுத்துத் தரப்பட்டதாகக் கூறி அனைத்து கணக்குகளையும் தமிழக காவல்துறை முடக்கியது.
இதை எதிர்த்து மடத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து இரு கணக்குகளை பயன்படுத்த அனுமதி தந்த நீதிமன்றம், மற்ற கணக்குகளை முடக்கியது குறித்து விசாரணை நடத்தியது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி சிவசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார்.
இந்திய குற்றவியல் சட்டம் 102வது பிரிவின் கீழ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தவறு என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த முடக்கலை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் இந்த வங்கிக் கணக்குகளின் மாதாந்திர ஸ்டேட்மெண்டை போலீசாரிடம் காஞ்சி மடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.