கணக்கு மோசடி வழக்கு: ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன்
சென்னை:
காஞ்சி சங்கர மடத்தின் கணக்குகளில் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஜெயேந்திரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று முன் ஜாமீன் வழங்கியது.
அதே நேரத்தில் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந் நிலையில் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் சேர்க்கப்படவுள்ளார்.
அதே போல மடத்தின் கணக்குகளை மோசடி செய்ததாகவும் ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், கணக்காளர் காலடி விஸ்வநாத அய்யர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளில் தன்னை போலீசார் கைது செய்யலாம் என்று அஞ்சுவதாகவும், இதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி ஜெயேந்திரர் சார்பில் இரண்டு முன் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் மடத்தின் கணக்கு மோசடி செய்யப்பட்டதாக பதிவாகியுள்ள வழக்கில் ஜெயேந்திரருக்கு இன்று உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. இதனால் இந்த வழக்கில் கைதாவதில் இருந்து ஜெயேந்திரர் தப்பிவிட்டார்.
அதே நேரத்தில் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என அரசுத் தரப்பும், ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மனு மீதான விசாரணையை நீதிபதி முருகேசன் வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதே நேரத்தில் 17ம் தேதி வரை ஜெயேந்திரரை கைது செய்ய மாட்டோம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.