சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: திமுக பொதுக் குழு தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. எனவே அதை விரைவில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்களின் கையில் உள்ள முக்கிய ஆயுதம் ஆகும். இதை பல ஜனநாயக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த உரிமையைத் தடை செய்வது நியாயமற்றதாகும். எனவே வேலை நிறுத்த உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு அது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்.

நதி நீர் இணைப்பை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். 2012ம் ஆண்டுக்குள் இத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

சுனாமி நிவாரணப் பணிகளை அதிமுக அரசு அரசியலாக்கி வருகிறது. அனைத்துக் கட்சியினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவி வரும் வேளையில், நிவாரணப் பணிகளை செய்வது அதிமுகவினர்தான் என்ற தோற்றத்தை தமிழக அரசு ஏற்படுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.

சுனாமி நிவாரணப் பணிகளில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்பட்டதாக அரசு கூறியது. ஆனால் எந்தக் குடும்பங்களுக்கு அந் நிதி வழங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளிமேடு கிராமத்தில் வினியோகிக்க 22.5 டன் அரிசியை எடுத்துச் சென்ற அதிமுகவினர் , 5 டன் அரிசியை மட்டுமே வினியோகித்துள்ளனர். இத்தகைய ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டசபை தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழக அரசு செய்திருக்கும் ஒரு தலைப்பட்சமான சிபாரிசை தொகுதி மறு வரையறை குழு ஏற்கக்கூடாது. அவ்வாறு ஏற்றால், அதை திமுக சட்ட ரீதியாக எதிர்க்கும். அதே நேரத்தில் மாநிலம் தழுவிய கிளர்ச்சியிலும் குதிப்போம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து அதிமுக நீக்கியது. எனவே இந்த முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அதிமுக ஆதிக்கம் செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.

சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மீதான சேவை வரி, சுங்க வரி, சாலை வரியை நீக்கி டீசலின் விலையை குறைத்துத் தர வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் மற்றும் சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பத்திரிக்கைத் துறையில் இப்போதுள்ள 26 சதவீதத்துக்கு மேல் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+