ஹெராயின்: இலங்கை நாட்டவருக்கு சிறை
சென்னை:
போதை மருந்து கடத்திய வழக்கில் 3 வெளி நாட்டினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை சிறப்புநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சூட்கேசின் அடியில் 3 கிலோ ஹெராயினை வைத்துக் கடத்த முயன்ற, இலங்கைத்தமிழர்கள் செல்லத்துரை சண்முகம் (கனடா குடியுரிமை பெற்றவர்), மதுரநாயகம் மற்றும் மலேசிய நாட்டுப் பெண் நடாஷா பிந்திஸகாரிஸ் ஆகிய மூவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை சிறப்புநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி நஸீர் முகம்மது,3 பேருக்கும் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
போதை மருந்து தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.